உக்ரைன் தலைநகர் கிய்வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில் தலைநகரைச் சுற்றி மிகக் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
தலைநகரில், மைதான் சதுக்கத்திற்கு அருகில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது மற்றும் நகரின் ட்ரொய்ஷ்சினா பகுதியில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
கிய்வில் பீரங்கித் தாக்குதல்கள் நகர மையத்திலிருந்து மைல்களுக்கு அப்பால் கேட்கும் அளவுக்கு சத்தமாக இருந்ததாக அங்குள்ள சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நகர மிருகக்காட்சி சாலைக்கு அருகிலும், ஷுலியாவ்கா சுற்றுப்புறத்திலும் 50க்கும் மேற்பட்ட வெடிப்புகள் மற்றும் கனரக இயந்திர துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுவருவதாக கிய்வ் இன்டிபென்டன்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிய்வ் நகரத்தை இலக்குவைத்து பல முனைகளில் இருந்து தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனிய அரச தரப்பு தகவல்களின்படி ட்ரொய்ஷினா மாவட்டத்தின் தலைநகரில் உள்ள CHP-6 மின் நிலையத்திற்கு அருகில் சண்டை நடந்து வருகிறது. மின் நிலையத்தை கைப்பற்றி நகருக்கான மின் விநியோகத்தை துண்டிப்பது இந்த தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கிய்வின் பெரெமோஹி அவென்யூவில் ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி சிதைந்த வாகனங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன. அங்கு பல இடங்களில் கட்டங்கள், வாகனங்கள் தீப்பற்றி எரிகின்றன.
வாசில்கிவில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலும் கடுமையான சண்டை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கருங்கடல் நகரமான மைகோலேவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து ரஷ்யப் படைகளை விரட்டியடித்ததாக உக்ரேனியப் படைகள் தெரிவித்துள்ளன.
கிய்வின் தலைநகருக்கு வடக்கே சுமார் 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செர்னிஹிவ் நகரைச் சுற்றி ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே கடும் சண்டை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை பிராந்திய தலைமையகம் தீப்பற்றி எரிவதை காணொளிகள் காண்பிக்கின்றன.
வெள்ளிக்கிழமை மாலையும் தலைமையக கட்டடம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் செர்னிஹிவ் நகரம் தங்களால் முழுமையாக முற்றுகையிடப்பட்டுள்ளதாக ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன. செர்னிஹிவை கைப்பற்றும் முயற்சியின்போது ரஷயப் படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் முப்பதுக்கும் மேற்பட்ட டாங்கிகளை அழித்ததாகவும் உக்ரைன் கூறுகிறது.
செர்னிஹிவில் ரஷ்ய துருப்புக்களின் முன்னேற்றத்தை முறியடித்துள்ளோம் என உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைவர் வலேரி ஜலுஷ்னி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பெலாரஸிலிருந்து கீவ் செல்லும் முக்கிய பாதையில் செர்னிஹிவ் உள்ளது.
இரண்டு பெலாரஸிலிருந்து வடக்குப் பாதைகள் வழியாக ரஷ்ய முன்னேறிவந்த நிலையில் இந்த முன்னேற்றத்தை மெதுவாக்கும் முயற்சியாக இவான்கிவில் ஒரு பாலத்தை தகர்த்ததாக உக்ரேனிய படைகள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் மற்றொரு கவச வாகன அணி உக்ரைன் வடகிழக்கில் பகுதியான சுமியைத் தாக்கியுள்ளது, இதுவும் தலைநகர் கிய்வ் செல்லும் ஒரு முக்கிய வழியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.